நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

இதற்கென்ன செய்வார்கள்?

தினமணி நாளிதளில் வெளிவந்த தலையங்கம் - 9 ஆகஸ்ட் 2013

கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பெரியாறு அணை நிரம்பிக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலையில் 135 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்த்தேக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தும் தமிழக அரசின் உரிமையில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியும்கூட, அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு சட்டம் இயற்றி, இது தொடர்பான வழக்கும் வாதங்களும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கை அன்னை தமிழகத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில், அணையை மழையால் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை அணைக்கு நீர்வரத்தும் மேலும் பல மடங்காக இருக்கும்போது, கேரளத்தின் சட்டத்தை "முல்லை நதி' மீறும்.
ஏற்கெனவே 152 அடி வரை தேக்கி வைக்கலாம் என்று இருந்த நிலையை கேரள அரசு 142 அடியாகக் குறைக்கச் செய்தது. தமிழகம் அதற்கு நட்புடன் இணக்கம் தெரிவித்தது. ஆனால் அதற்கும் கீழே, 136 அடி உயரம் வரைதான் தேக்கி வைக்க வேண்டும், அணை பலமானதாக இல்லை என்று கேரள அரசு கூறியது. ஆனால் தற்போது, முல்லைப் பெரியாறு அணை தாங்கள் விதித்த அளவுக்கு மேலாக நிரம்பிச் செல்வதைக் கண்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய கேரள மாநில தலைமைச் செயலர் பரத்பூஷண், அணை நிரம்புவதால் ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.

இடுக்கியில் இருந்து தண்ணீரை தற்போதைக்குத் திறந்துவிட வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது அல்ல என்பதை கேரள அரசு தன்னையறியாமலேயே வெளிப்படுத்துகிறது.முல்லைப் பெரியாறு அணை நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது, அதனால் தண்ணீரை அதிக அளவுக்கு தேக்கி வைக்கும்திறன் இல்லை என்பதுதான் கேரளத்தின் வாதம். ஆனால் இப்போது இயற்கை சொல்கிறது - அணை பலமாக உள்ளது. இதற்கு மேலும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வலிமையும் உண்டு. அணைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிந்து வைத்துள்ளதால்தான், இடுக்கி அணையை தற்போதைக்கு திறக்க வேண்டிய தேவை இல்லை என்றும் சொல்கிறார்கள்.

அணை பலமற்று இருப்பதாக, கசிவு ஏற்படுவதாக கேரள அரசுக்கு அச்சம் இருந்திருப்பின், அவர்கள் இடுக்கி அணையை இப்போதே திறந்துவிட்டு, காலியாக வைத்திருப்பார்கள். ஏனென்றால், முல்லைப் பெரியாறு அணையில் சேதம் ஏற்பட்டு கூடுதல் தண்ணீர் வரும்போது, இடுக்கி அணை காலியாக இருந்தால் மட்டுமே எதிர்பாராத அதிக நீர்வரத்தை சமாளிக்கவும், அணையிலிருந்து நீரை வெளியேற்றவும் திட்டமிட முடியும். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதால்தான் இப்போது இடுக்கி அணை நீரை திறந்துவிடத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் குறைகள் உள்ளதாகச் சொல்லும் கேரள அரசு, அணையில் பயன்படுத்தப்பட்டுள்ள நீரியல் தொழில்நுட்பம் மற்றும் அணையின் பாதுகாப்பு உள்பட 11 விஷயங்கள் குறித்து இன்னொரு குழு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்க அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

தற்போது பெய்துவரும் பலத்த மழை ஒரு அரிய வாய்ப்பு. அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணையின் நீரை 142 அடி உயரம் தேக்கி வைக்க முடியுமா என்பதை பரிசோதிக்க சரியான காலம் இதுவே. தமிழக அரசு ஏற்கெனவே உரிமை பெற்றுள்ளபடி 142 அடிவரை அணையில் நீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட அணையின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகள் மெய்நிகர் ஆய்வுகள் மட்டுமே. தற்போது அணைக்கு நீர்வரத்து மேலதிகமாக உள்ள நிலையில், இந்த நீரைத் தேக்கி வைத்து, அந்த நிலையில் உண்மையான ஆய்வை, மெய்யான சூழலில் நடத்தி, அணையின் பலத்தை நிரூபிக்கலாம். நீதிமன்றத்தை வேண்டி நின்றாலும், நீதிமன்றம் அனுமதித்தாலும் கேரள அரசு "முல்லை'க்கண்ணீர் வடிக்கும். கூடாது என்று அடம் பிடிக்கும். ஆனால் இயற்கை, மழையைக் கொட்டித் தீர்த்தால் கேரளம் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இந்த நேரத்தில், இயற்கை மேலும் மேலும் மழை பொழிய வேண்டும் என்று விரும்புவதும், நம்பிக்கை உள்ளவர்கள் வேண்டுவதும் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று.

வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாவ்கினிடம் கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: "கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் ஒரு முறைப்படியான விதியில் இயங்குகிறது. இந்த முறைதவறாத இயக்கத்தில் கடவுள் - அவர் இருந்தாலும்- குறுக்கிடுவதே இல்லை'. இயற்கை மழையைக் கொட்டி, அணைக்கு நீர்வரத்தை அதிகப்படுத்தி, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், 142 அடி வரை அணை நீர் உயர்ந்து நிற்க, அணையின் பலத்தை உலகுக்கு நிரூபித்துக் காட்டினால், எப்போதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறை சொல்லி ஏற்க மறுக்கும் கேரள அரசு, இயற்கையின் நீதியில் குறுக்கிட முடியாது; மேல்முறையீடு செய்ய முடியாது; வாய்தா கேட்க முடியாது, இன்னொரு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோர இயலாது.

மனித நீதி மறுக்கப்படும்போது இயற்கை நீதி கை கொடுக்கும் என்பார்கள். தமிழகம் இயற்கைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

Source & courtesy: Dinamani