நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் காலமான தினம்

இன்று சனவரி 31 விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் காலமான தினம் 

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய் மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936-ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். 

சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.

நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார். தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். 

‘எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்’ என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர். இவரோடு பழகுவது பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். 

சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர். மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90-வது வயதில் (1987) மறைந்தார். 

சென்னை யில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட நாள்

12 ஜனவரி 1967...

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 

துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம். ஆம் இது எம்ஜியார் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா நீதி மன்றத்தில் கூறிய வார்த்தைகள்...

எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. 

என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம் மேலோங்கியே இருக்கிறது. 

1967-ம் ஆண்டு,  ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. தான் கொண்டு போயிருந்த துப்பாக்கியில் மூன்று தோட்டாக்களை மட்டுமே நிரப்பியிருந்தார் ராதா. 

எம்.ஜி.ஆரை நோக்கி துப்பாக்கியின் விசை அழுத்தப்பட, எம்.ஜி.ஆரின் இடதுகாதை ஒட்டி துப்பாக்கி ரவை துளைத்துக் கொண்டு போனது. பிறகு அதே துப்பாக்கியால் தனது நெற்றிப் பொட்டிலும், தோளிலும் இரண்டு குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் மிதந்தார் எம்.ஆர்.ராதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தனர்.

"என் முகத்துக்கு நேராக குண்டு பாய்ந்துவந்தது. நான் எப்படிப் பிழைத்தேன்?" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரனிடம் (இராஜிவ் கொலை வழக்கு) ஆச்சர்யத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர். 

ராதா பயன்படுத்திய ரவைகளை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரசேகரன். 

'அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை' எம்ஜியாரிடம் விளக்கினார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு என்னவெல்லாம் காரணம் என அரசுத் தரப்பு,  நீதிமன்றத்தில் தெளிவாகவே எடுத்து வைத்தது. 

எம்.ஆர்.ராதாவின் வக்கீலாக என்.டி.வானமாமலை ஆஜரானார். ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 

தொழிலாளி திரைப்பட சூட்டிங்கின் போது எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், எம்.ஜி.ஆர், 

‘இந்த பஸ் இனி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்' எனப் பேச வேண்டும். 

‘இந்த பஸ்தான் இனி தொழிலாளர்களின் உதயசூரியன்' என மாற்றிச் சொன்னார் எம்.ஜி.ஆர். 

இதனால் கடுப்பான எம்.ஆர்.ராதா, 

‘சினிமாவுக்குள்ள உன் கட்சி சின்னத்தைக் கொண்டு வராதே... வெளிய போய் மேடை போட்டு பேசு' என சண்டை போட்டிருக்கிறார். 

இதனால் கோபமான எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்த, தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து சமாதானப்படுத்தினார். 

இறுதியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்று பேசவைத்தார் சின்னப்பா. 

இதுதவிர, 'காமராஜரைக் கொல்ல சதி செய்யப்படுவதாகவும்' ராதா எழுதிய ஒரு கட்டுரை, எம்.ஜி.ஆரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருந்தது. 

வழக்கு விசாரணையில், 'எம்.ஆர்.ராதாவை வளரவிடாமல் சினிமா வாய்ப்புகளை எம்.ஜி.ஆர் கெடுத்தார்' என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது.

'எம்.ஜி.ஆரும் அவருடைய துப்பாக்கியால் என்னை நோக்கிச் சுட்டார்' 

-என ராதா தரப்பில் சொல்லப்பட, அதை முறியடித்தது தடயவியல் துறை. கே.சி.பி. கோபாலகிருஷ்ணன், பி.சந்திரசேகரன் மற்றும் துப்பாக்கி நிபுணர் ஏ.வி.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு, வெடிக்கப்பட்ட 3 குண்டுகளும் ராதாவின் துப்பாக்கியில் இருந்து மட்டுமே வெளியேறியது என நிரூபித்தனர். 

இந்த சம்பவம் நடந்தபோது, கண்ணால் பார்த்த ஒரே சாட்சி. தயாரிப்பாளர் வாசு மட்டும்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தில், 

'எம்.ஜி.ஆரை சுட்டுவிட்டு அதே துப்பாக்கியால் இரண்டு முறை தன்னை சுட்டுக் கொண்டார் ராதா' என வாக்குமூலம் கொடுத்தார். 

'எம்.ஜி.ஆர் செல்வாக்குமிக்கவர் என்பதால் வாசுவை மிரட்டி பொய் சொல்ல வைக்கின்றனர்' என ராதா தரப்பில் வாதம் செய்தாலும், முடிவில் சிறைத்தண்டனைக்கு ஆளானார் ராதா.

நீதிமன்றத்தில் வாதம் நடந்தபோது பல சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. 

'எம்.ஆர்.ராதா லைசென்ஸ்
இல்லாத துப்பாக்கியால் சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் குற்றம் சாட்டிக் கொண்டே போக, ஒருகட்டத்தில் கடுப்பான ராதா, 

"யுவர் ஆனர். வழக்கில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 'லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியால் ராதா சுட்டார்' என அரசுத் தரப்பு வக்கீல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். துப்பாக்கியால் சுட்டதில் நானும் சாகவில்லை. ராமச்சந்திரனும் சாகவில்லை. யாரையும் கொல்லாத ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையா?" எனக் கேட்க, அதிர்ந்தது நீதிமன்றம்.

துப்பாக்கிச் சூடு வழக்கு மிக விரைவாக நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 4-ம் தேதியன்று நீதிபதி லட்சுமணன் தீர்ப்பை வாசித்தார். 

'அரசியல் முன்விரோதம் காரணமாக ராதா தன் துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை சுட்டார். பிறகு தன்னைத்தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார். இதை அரசுத்தரப்பு ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளது' எனக் கூறி,  

ராதாவுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ராதா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார். மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 

மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அங்கே தண்டனை காலம் ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்களில் அவர் விடுதலையானார்.

தண்டனைக் காலத்தில் அவரது சிறைக் கொட்டடியில் வெளிநாட்டு கைதி ஒருவரும் தங்கியிருந்தார். அந்தக் கைதிக்கு ராதா சமைத்துப் போட்ட கேசரியும், சாம்பாரும் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஒருநாள் பேச்சுவாக்கில் ஒன்றைக் கேட்டார் ராதா. 

"ஏன்யா வெள்ளைக்காரா...உங்கள் ஊரில் எப்படி... 30 வருஷம் வக்கீலாக இருக்கறவர்தான் ஜட்ஜா வருவாரா?" எனக் கேட்க, அந்த வெளிநாட்டுக் கைதியும், 

"ஆமாம். எங்கள் ஊரிலும் அதே வழக்கம்தான்" எனச் சொல்ல, பலமாக சிரித்த ராதா, 

"அதெப்படிய்யா...முப்பது வருஷம் பொய்யை மட்டுமே வாழ்க்கையாக வச்சுட்டு வாதாடி சம்பாதிக்கற ஒருத்தர் ஜட்ஜா வந்து உட்கார்ந்ததும், 'மை லார்டுன்னு' சொல்றோமே. இந்த அநியாயம் வேறெங்காவது நடக்குமா?" 

-எனக் கேட்க, வெளிநாட்டுக் கைதி யோசனையில் ஆழ்ந்தாராம். அதுதான் எம்.ஆர்.ராதா.

துப்பாக்கிச் சூடு வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் ராதா. 

'திராவிடர் கழகத்துடன் தொடர்பில்லை' என எழுதித் தந்தால் விடுதலை செய்வதாகக் கூறியும், நிபந்தனையை ஏற்க மறுத்து பதினொரு மாதங்கள் சிறையில் இருந்தார் எம்.ஆர்.ராதா. 

கடைசிவரை, எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாமல் இருந்த எம்.ஜி.ஆரும் ராதாவும் சந்தித்துக் கொண்டது பெரியாரின் இறப்பின்போதுதான். 

அப்போதுகூட, 'உங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வேண்டாம்' என ராதா கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு.

அதன்பின் மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 

'அந்தக் கூட்டத்தில் #எம்ஜிஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா.

"எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். 

எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்"

இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா. 

மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய அவருக்கு  மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 

1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

நன்றி: ஆ.விஜயானந்த் | விகடன்

கெர்போட்ட_நிவர்த்தி


தினசரி காலண்டரில் "இன்று கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா

நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போதுகெர்போட்ட ஆரம்பம்என்று இருப்பதை பார்த்து இந்த கேள்வி கேட்டுள்ளீர்களா?

சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம்கெர்போட்ட நிவர்த்திஎன்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள் 

இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல. உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை, அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது. இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர். அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்

இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும், அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள் ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால் ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும். இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது. 

ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா, 
எனவே மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்

இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்

இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது. இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்

ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்.