நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே - நக்கீரர்

இதற்கென்ன செய்வார்கள்?

தினமணி நாளிதளில் வெளிவந்த தலையங்கம் - 9 ஆகஸ்ட் 2013

கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பெரியாறு அணை நிரம்பிக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலையில் 135 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்த்தேக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தும் தமிழக அரசின் உரிமையில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியும்கூட, அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு சட்டம் இயற்றி, இது தொடர்பான வழக்கும் வாதங்களும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கை அன்னை தமிழகத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில், அணையை மழையால் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை அணைக்கு நீர்வரத்தும் மேலும் பல மடங்காக இருக்கும்போது, கேரளத்தின் சட்டத்தை "முல்லை நதி' மீறும்.
ஏற்கெனவே 152 அடி வரை தேக்கி வைக்கலாம் என்று இருந்த நிலையை கேரள அரசு 142 அடியாகக் குறைக்கச் செய்தது. தமிழகம் அதற்கு நட்புடன் இணக்கம் தெரிவித்தது. ஆனால் அதற்கும் கீழே, 136 அடி உயரம் வரைதான் தேக்கி வைக்க வேண்டும், அணை பலமானதாக இல்லை என்று கேரள அரசு கூறியது. ஆனால் தற்போது, முல்லைப் பெரியாறு அணை தாங்கள் விதித்த அளவுக்கு மேலாக நிரம்பிச் செல்வதைக் கண்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய கேரள மாநில தலைமைச் செயலர் பரத்பூஷண், அணை நிரம்புவதால் ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.

இடுக்கியில் இருந்து தண்ணீரை தற்போதைக்குத் திறந்துவிட வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது அல்ல என்பதை கேரள அரசு தன்னையறியாமலேயே வெளிப்படுத்துகிறது.முல்லைப் பெரியாறு அணை நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது, அதனால் தண்ணீரை அதிக அளவுக்கு தேக்கி வைக்கும்திறன் இல்லை என்பதுதான் கேரளத்தின் வாதம். ஆனால் இப்போது இயற்கை சொல்கிறது - அணை பலமாக உள்ளது. இதற்கு மேலும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வலிமையும் உண்டு. அணைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிந்து வைத்துள்ளதால்தான், இடுக்கி அணையை தற்போதைக்கு திறக்க வேண்டிய தேவை இல்லை என்றும் சொல்கிறார்கள்.

அணை பலமற்று இருப்பதாக, கசிவு ஏற்படுவதாக கேரள அரசுக்கு அச்சம் இருந்திருப்பின், அவர்கள் இடுக்கி அணையை இப்போதே திறந்துவிட்டு, காலியாக வைத்திருப்பார்கள். ஏனென்றால், முல்லைப் பெரியாறு அணையில் சேதம் ஏற்பட்டு கூடுதல் தண்ணீர் வரும்போது, இடுக்கி அணை காலியாக இருந்தால் மட்டுமே எதிர்பாராத அதிக நீர்வரத்தை சமாளிக்கவும், அணையிலிருந்து நீரை வெளியேற்றவும் திட்டமிட முடியும். முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்பதால்தான் இப்போது இடுக்கி அணை நீரை திறந்துவிடத் தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் குறைகள் உள்ளதாகச் சொல்லும் கேரள அரசு, அணையில் பயன்படுத்தப்பட்டுள்ள நீரியல் தொழில்நுட்பம் மற்றும் அணையின் பாதுகாப்பு உள்பட 11 விஷயங்கள் குறித்து இன்னொரு குழு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்க அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

தற்போது பெய்துவரும் பலத்த மழை ஒரு அரிய வாய்ப்பு. அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணையின் நீரை 142 அடி உயரம் தேக்கி வைக்க முடியுமா என்பதை பரிசோதிக்க சரியான காலம் இதுவே. தமிழக அரசு ஏற்கெனவே உரிமை பெற்றுள்ளபடி 142 அடிவரை அணையில் நீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட அணையின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுகள் மெய்நிகர் ஆய்வுகள் மட்டுமே. தற்போது அணைக்கு நீர்வரத்து மேலதிகமாக உள்ள நிலையில், இந்த நீரைத் தேக்கி வைத்து, அந்த நிலையில் உண்மையான ஆய்வை, மெய்யான சூழலில் நடத்தி, அணையின் பலத்தை நிரூபிக்கலாம். நீதிமன்றத்தை வேண்டி நின்றாலும், நீதிமன்றம் அனுமதித்தாலும் கேரள அரசு "முல்லை'க்கண்ணீர் வடிக்கும். கூடாது என்று அடம் பிடிக்கும். ஆனால் இயற்கை, மழையைக் கொட்டித் தீர்த்தால் கேரளம் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே இந்த நேரத்தில், இயற்கை மேலும் மேலும் மழை பொழிய வேண்டும் என்று விரும்புவதும், நம்பிக்கை உள்ளவர்கள் வேண்டுவதும் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று.

வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாவ்கினிடம் கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: "கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். இந்தப் பிரபஞ்சம் ஒரு முறைப்படியான விதியில் இயங்குகிறது. இந்த முறைதவறாத இயக்கத்தில் கடவுள் - அவர் இருந்தாலும்- குறுக்கிடுவதே இல்லை'. இயற்கை மழையைக் கொட்டி, அணைக்கு நீர்வரத்தை அதிகப்படுத்தி, அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், 142 அடி வரை அணை நீர் உயர்ந்து நிற்க, அணையின் பலத்தை உலகுக்கு நிரூபித்துக் காட்டினால், எப்போதும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறை சொல்லி ஏற்க மறுக்கும் கேரள அரசு, இயற்கையின் நீதியில் குறுக்கிட முடியாது; மேல்முறையீடு செய்ய முடியாது; வாய்தா கேட்க முடியாது, இன்னொரு குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோர இயலாது.

மனித நீதி மறுக்கப்படும்போது இயற்கை நீதி கை கொடுக்கும் என்பார்கள். தமிழகம் இயற்கைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

Source & courtesy: Dinamani

முல்லைப் பெரியாறு



அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் நமது கேரள சகோதரர்கள்

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள்; பலமாகக் கேட்கிறார்கள்!

116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே, தங்கள் செலவிலேயே, புதிய அணையைக் கட்டி,  தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே;
ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம்?

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள்.

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை!

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே, என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக - நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது). எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால், இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை தான் பயன்படுத்த முடியும் (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ்). ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும், அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும். எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -
1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.

இதன் பிறகு தான், 27-02-2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில், மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து ,புதிய அணை கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.